வரலாற்று சுவடுகள் | பேரூர் கல்வெட்டுகள் | கொங்கு வரலாறு
பேரூர் மற்றும் பட்டீஸ்வரர் கோவிலின் சிறப்பு கொங்கு வரலாறு பற்றியும் கல்வெட்டுகளின் ஆதரங்களின் மூலம் அறியலாம்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வடகிழக்கில் தெப்பக்குளத்தில் இருந்து அரசம்பலவானர் சன்னிதிக்கு செல்லும் ஒரு சந்து தடத்தில் இடிந்த பாழடைந்த கோவில் 2010ல் புதுபிக்கப் பட்டது. இது அழகிய சிற்றம்பலம் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் அடிபாகத்தில் எட்டு கல்வெட்டுகள் உள்ளன அவற்றில் ஐந்து மட்டுமே பூர்த்தியானவை.
இந்த கல்வெட்டுகளில் தானம் கொடுக்கப்பட்ட விவரங்கள் காணப்படுகிறது. இதில் குறிப்புனரப்பட்ட வார்த்தைகள் ராஜாத்தி மலசெம்பியன், கீழானடிவதி, திருவானை வாய்க்கால்,கண்ணாற்று சிவ பாத சேகர சதுர்வேதி மங்ககலத்துசபை, வீரகேரள விலாடகுல மாணிக்கவதி,அதிராஜராஜவாய்க்கால் முதலிய எல்லை பெயர்களும்.
வீரசமக்கர்கள்,அம்மணங்கார்,சேனாதிபதிகள், கடமை, எல்லை, அகவை, முதலிய பெயர்களும் காணப்படுகின்றன.
விக்கிரம சோழன் :
இவன் கொங்குநாட்டை ஆண்டவன். சோழநாட்டு விக்கிரமன் அல்ல. இவனைப்பற்றி கொங்கு நாட்டில் 68 கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. பேரூரில் இவனது 12 முதல் 27 ஆண்டுகள் வரையிலுமான ஆட்சியையும், வெள்ளலூரில் மூன்று ஆண்டு முதல் 18 ஆண்டு வரையிலும் சாசனங்கள் கிடைத்துள்ளன. இவனுடைய கல்வெட்டுகளில் பேரூர் பட்டீஸ்வரருக்கு அக்காலத்தில் திருவான் பட்டியுடையார் என்ற பெயர் வழங்கி வந்ததாக தெரிய வருகிறது.
வீரசோழன் :
இவனைப்பற்றிய ஒரே ஒரு சாசனம் பேரூரில் உள்ளது. இரு கொங்கும் ஆண்டவன், கலிமூர்க்கம்மன் என்ற பட்ட பெயர்களும் உண்டு. இவன் தான் உடுமலைப் பேட்டை தாலுக்கா, சங்கிராம நல்லூர் வீரசோளீசுரமுடையார் ஆலயம் கட்டியவன்.
வீரராஜேந்திர சோழன் :
இவனைப்பற்றி 141 சாசனங்கள் கிடைத்துள்ளது. இவனது காலத்தில் ஆனையச்சு, சீயக்கி என்ற நாணயங்கள் வழங்கி வந்தன. இவன் காலத்து பேரூர் சாசனத்தில், பாண்டிய நாட்டு ஒரு வியாபாரி பாம்புணிக்கிழவன் அப்பன் என்பார், பேரூர் திருவான் பட்டியுடையாருக்கு சந்திர தீபம் இரண்டு தானம் செய்ததும், அதற்கு வேண்டிய பொருள் கோவிலில் சேர்த்ததும் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது.
வீரராஜேந்திரன் :
இவரது பட்டப் பெயர் : கோனேரின்மை கொண்டான் இப்பெயரில் 55 கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அவைகளில் பேரூரில் மட்டும் மூன்று கிடைத்துள்ளது. இவன் காலத்து பேரூர் சாசனத்தில் ராஜதுரோகிகளின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, கோவில் களுக்கு கொடுக்கப்பட்டது. திரிபுவனசிங்கதேவன் என்பான் ராஜ துரோகி ஆனதால் அவனது சொத்துக்கள் எல்லாம் கைப்பற்றி, பேரூர் திருவான்ப்ட்டியுடையாருக்கு ராஜராஜசந்தி என்ற விழாவுக்காக உச்சி சந்து அமுதுக்காக அந்த ராஜதுரோகியின் புத்தூர், கோளூர், குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள பேரூர் நாட்டு விளைநிலங்களை எல்லாம் மார்கழி மாதம் 4ம் நாள் கொடுத்ததாக விபரங்கள் உள்ளன.
வரலாற்று சுவடுகள் தொடர்கிறது ...
பிற பகுதிகள் :
சுவடுகளைத் தேடி
சுவடுகளைத் தேடி(பகுதி 2)
சுவடுகளைத் தேடி(பகுதி 3)
சுவடுகளைத் தேடி(பகுதி 4)